கோணக்காத்துப் பாட்டு

கோணக்காத்துப் பாட்டு – வெங்கம்பூர் சாமிநாதன்

பஞ்சக்கும்மி பாட்டு

செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் கோணக்காத்துப் பாட்டு இடம்பெற்றுள்ளது

தமிழ்நாடு புயலால் தாக்குண்ட போது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல்.

பஞ்சக்கும்மி பாட்டு

  • நாட்டில் பொரும் பஞ்சம் காலங்களில், மக்கள் ஏற்பட்ட துயரங்களை பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல்களாகப் புலவர்கள் பாடினர். இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
  • கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்து, இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன்
  • கோணக்காத்துப் பாட்டு புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.அதிலிருந்து பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடல்

உருமங் கட்டிய முகிலால் கோணக்காத்து உழன்று உழன்று மெத்த அடித்ததினால்

பெரிதான வீடுகளெல்லாம் கோப்புடனே பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே

சிங்காரமாய் வாங்கல் நகரில் வைத்திருந்த தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே

பாடலின் பொருள் 

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக

பெரிய வீடுகளின் கூரைகள் எல்லொம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.

வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

பாடல்

மங்காத காங்கேய நாட்டில் மேட்டுக்காட்டில் மாளாத பருத்தி எல்லாம் கோலாகப் போச்சுதே

பாடலின் பொருள் 

அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிக்களாக மாறின

பாடல்

ஆரங்கள் வைத்த சுவரெல்லாம் மெத்தை வீடு அடியோடே விழுந்ததங்கே

கெடிகலங்கித்  தாரங்களும் பிள்ளைகளுடன் கூட்டிக்கொண்டு தானடந்து வேகமுடன் கூகூ வென்றார் வாகுடனே

பாடலின் பொருள் 

அழகிய சுவர்கள் உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் ‘கூகூ’ என்று அலறியபடி ஓடினர்.

பாடல்

தொண்டைமான் சீமை தன்னிலே வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலே

தானே சேகரமாய் வைத்த மரங்கள் அத்தனையும் சின்னபின்னமாய் ஒடிந்து பின்னமாச்சுதே

பாடலின் பொருள் 

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

பாடல்

சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் கடலிலே தானடந்து வேகமுடன் வரும் போதிலே

கொம்புசுத்திக் கோணக்காத்து காலனைப் போல் கோண மழை வந்து கப்பல் தான் கவிழ்ந்ததே

பாடலின் பொருள் 

கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது

பாடல்

ஆர்க்காடு மைசூர் வரைக்கும் கோணக்காத்து அலறி அலறி மெத்த அடித்ததனால் மார்க்கமான சாலையில் போன சனங்களெல்லாம் மயங்கி மயங்கி மெத்தத் தவித்தார்களே

பாடலின் பொருள் 

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்

பாடல்

தெத்துக்காடு காளப்பநாயக்கன் பட்டியிலே செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்

பாடலின் பொருள் 

தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன.

பாடல்

சித்தர்கள் பொருந்தி வாழும் கொல்லி மலை சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே

பாடலின் பொருள்

சித்தர்கள் வாழும் கொல்லி மலையச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது

பாடல்

இப்படிக்கிச் சேதங்களானால் குமரேசா எப்படிப் பிழைத்து நாங்கள் ஒப்பிதமாவோம்

மெய்ப்புடன் வேலாயுதங் கொண்டு வருகின்ற விக்கின மெல்லாம் தீர்த்துக் காத்திடீரையா

பாடலின் பொருள்

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுக்களை நாங்கள் எவ்வாறு தங்குவோம்

எங்களுக்கு வருகின்றை இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!

வெங்கம்பூர் சாமிநாதன்.

 சொல்லும் பொருளும்

  • முகில் – மேகம்
  • வின்னம் – சேதம்
  • கெடி கலங்கி – மிக வருந்தி
  • வாகு – சரியாக
  • சேகரம் – கூட்டம்
  • சம்பிரமுடன் – முறையாக
  • காலன் – எமன்
  • மெத்த – மிகவும்
  • காங்கேய நாடு – கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!