தலைக்கோல் அமைதி
- மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது
தலைக்கோல்
- போரில், தோற்ற மன்னனுடமிருந்து பறிக்கப்பட்ட அழகு மிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது தலைக்கோல்
பாடல்
பேரிசை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு.
கண்இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய நாவல்அம்பொலம் தகட்டு இடை நிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து, **
வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர் பொன் குடத்து ஏந்தி மண்ணிய பின்னர், மாலை அணிந்து, நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை
அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு முரசு எழுந்து இயம்பப்
பல்இயம் ஆர்ப்ப, அரைசொடு பட்ட ஐம்பெரும் குழுவும் தேர் வலம் செய்து, **
கவிகைக் கொடுப்ப ஊர்வலம் செய்து புகுந்து, முன் வைத்து ஆங்க
பாடலின் பொருள்
- தலைக்கோல் அமைதி அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர்.
- அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாகுவர்
- வெண்கொற்றக குடையுடன் உலகாளும் மன்னனின் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
- அத் தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.
- பின்பு மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்
- முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப் பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.
- பின்பு அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான்.
- இவ்வாறு மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.
சொல்லும் பொருளும்
- மண்ணிய – கழுவிய
- சாம்பூந்தம் – பொன் தகடு
- ஓடை – முக படாம்
- பரசினர் – வாழ்த்தினர்
- நாவலம் பொலம் – சாம்பூந்தம் – உயர்ந்த வகைப் பொன்
- தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
- அரசு உவா – பட்டத்து யானை
- பல்இயம் – இன்னிசைக் கருவி
மாதவியின் நாட்டியம் – மங்கலப் பாடல்
பாடல்
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
வலக்கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து வலத் தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி * *
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல் நெறி
இயற்கைத் தோரிய மகளிரும் * *
சீர் இயல் பொலிய, நீர்அல நீங்க,
வாரம் இரண்டும் வரிசையின் பாடப் பாடிய வாரத்து*
ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
பாடலின் பொருள்
- அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.
- அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர்.
- அதன்பின்பு அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள்.
- அவ்வாறே ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரிய மகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத் தூணின் அருகே போய் நின்றனர்.
- நன்மை பெருகவும் தீமை நீங்கவும் வேண்டி, ஓரொற்றுவாரம் .’ஈரொற்றுவாரம்’ என்னும் தெய்வப்பாடல்களை முறையாகப் பாடினர்
- பின் அப்பாடலின் முடிவில் இசைப்பதற்கு உரிய இசைக் கருவிகள் அனைத்தும் கூட்டாக இசைத்தன.
சொல்லும் பொருளும்
- குயிலுவ மாக்கள் – இசைக்கருவிகள் வாசிப்போர்
- தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
- வாரம் – தெய்வப்பாடல்
இசைக்கருவிகள் ஒலித்த முறை
பாடல் – (95-142)
குழல் வழி நின்றது யாழே,
யாழ் வழித் தண்ணுமை நின்றது தகவே,
தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே,
முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை***
பாடலின் பொருள்
- குழலின் வழியே யாழிசை நின்றது;
- யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது
- தண்ணுமையோடு இயைந்து முழவ ஒலித்தது
- முழவுடன் இடக்கை வாத்தியம் கூடி நின்று ஒலித்தது.
- இவ்வாறு அனைத்துக் கருவிகளும் இயைந்து இசைத்தன.
சொல்லும் பொருளும்
- ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்
பாடல் – 143 – 145
பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின்,
பா வகை : ஆசிரியப்பா **
பாடலின் பொருள்
- பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி
- நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது
- பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.
பாடல் – 157-163
காவல் வேந்தன் இலைப் பூங்கோதை வழாமைத் தலைக்கோல் எய்தித் (மாதவி)
தலைஅரங்கு ஏறி விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்.
பாடலின் பொருள்
- மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாத ஆடினாள்.
- அந்த ஆடலைக் கண்டு அகமகிழந்த மன்னனிடமிருந்து ‘தலைக்கோலி‘ என்னும் பட்டமும் பெற்றாள்.
- அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் ‘பரிசு இவ்வளவு’ என நூல் விதித்த முறைப்படி
- “(ஆயிரத்தெட்டு) 1008 கழஞ்சுப் பொன் மாலையை” மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.
சொல்லும் பொருளும்
- இலைப் பூங்கோதை – அரசன் அணிந்து ள்ள பச்சை மாலை
- கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.