மனோன்மணீயம்

  • தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம்
  • மனோன்மணீயம் எளிய நடையில் ஆசிரிப்பாவால் அமைந்தது.
  • மனோன்மணீயம் (ஐந்து) 5 அங்கங்களையும் (இருபது) 20 களங்களையும் கொண்டது.
  • மனோன்மணீயம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
  • மனோன்மணீயத்தில் உள்ள கிளைக் கதை ‘சிவகாமியின் செல்வம்’
  • 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாக மனோன்மணீயம் திகழ்கிறது.
  • நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த, காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக மனோன்மணீயம் என்னும் நாடக நூல் விளங்குகிறது.
  • இயற்கையில் ஈடுபாடு கொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத இன்பமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ளது மனோன்மணீயம்.
  • தமிழன்னை பெற்ற நல் அணிகலன் மனோன்மணீயம் ஆகும்

மனோன்மணீயம் மொழிபெயர்ப்பு

  • 1866ல் லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது மனோன்மணீயம்.
  • 1881ல் மனோன்மணீயம் நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதியுள்ளார்.

பேராசிரியர் மனோன்மணீயம்

  • பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855ல் பிறந்தார்.
  • பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியாகப் பணியாற்றி உள்ளார்
  • பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு ராவ் பகதூர் என்னும் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
  • தமிழ்க அரசு, சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.

தமிழ் நாடக இலக்கண நூல்கள் சில

  • சந்தம்
  • முறுவல்
  • சயந்தம்
  • குண நூல்
  • கூத்த நூல்
  • நாடகவியல்
  • செயன் முறை
  • செயிற்றியம்
  • அகத்தியம்
  • மதிவாணனார் நாடக இலக்கண நூல்

மனோன்மணீயம் – மனோன்மணீயம் சுந்தரனார்

சுந்தர முனிவர் அறையிலிருந்து ஆசிரமம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை செய்த நடராஜன்

நடராஜன் தனக்குத்தானே பேசிக்கொள்வது (தனிமொழி)

(மூன்றாம்) 3ம் அங்கம், (இரண்டாம்) 2ம் களம்

இடம் – ஊர்ப்புறத்து ஒரு சார்

காலம் – ஏற்பாடு **

கதாபாத்திரங்கள் – சந்தர முனிவர், நடராஜன் *

தலைப்புகள்

  • இலக்கு வேண்டும்
  • புல்லின் பரிவு
  • வாய்க்காலின் விசித்திரம்
  • நாங்கூழ்ப் புழுவின் பொது நலம்

மனோன்மணீயம் நாடக நூலின் முன் சுருக்கம்

  • சுந்தர முனிவர் தனது அறையிலிருந்து ஆசிரமம் வரை யாரும் யாவண்ணம் சுரங்கம் அமைக்கும் பணியை நடராஜனுக்கு அளித்திருந்தார்.
  • நடராஜனும் அப்பணியை ஓரளவு முடித்துவிட்டான்.
  • நடராஜன் காலை வேளையில் ‘ஆசிரமத்தில் இன்னும் சிறுபகுதி வேலை செய்ய வேண்டியுள்ளது. அதுவும் இன்றிரவு முடிந்துவிடும்’ என்று எண்ணிக்கொண்டு ஊரின் புறமாக தனித்திருந்தான்.
  • அப்போது தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்

இலக்கு வேண்டும்

காலையில் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய் இன்று இரா முடிக்கினும்

முடியும் எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு வேண்டும் உயிர்க்கு அது (இலக்கு) தூண்டுகோல் போலாம். ****

ஈண்டு எப்பொருள் தான் இலக்கற்று இருப்பது?

மனோன்மணீயம் சுந்தரனார்

சொல்லும் பொருளும்

  • கடிநகர் – காவல் உடைய நகர்

நாங்கூழ்ப் புழுவின் பொதுநலம்

நாங்கூழ்ப் புழுவை நோக்கி

ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன் பாடு ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்!

உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில் மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ. (நாங்கூழ்ப் புழு)

எம்மண்ணாயினும் நன்மண்ணாக்குவை விடுத்தனை இதற்கா, எடுத்த உன் யாக்கை * *

உழுதுழுது உண்டு மண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித்து உருட்டி வெளிக்கொணர்ந்தும் புகழ் வேண்டார் போல ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!

இப்புற் பயிர் நீ இங்ஙனம் உழாயேல் எப்படி உண்டாம்?

எண்ணாது உனக்கும் குறும்புசெய் எறும்பும் கோடி கோடியாய்ப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமாறென்னை?

ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள ? (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) **

விழுப்புகழ் வேண்டலை. அறிவோம், ஏனிது ? துதிக்கலம் உன்தொழில் நடத்துதி.

ஆ! ஆ! எங்கும் இங்ஙனே இணையிலா இன்பும் பங்கமில் அன்பும் தங்குதல் திருந்தக் காணார் பேணும் வாணாள் என்னே? **

மனோன்மணீயம் சுந்தரனார்

சொல்லும் பொருளும்

  • நாங்கூழ்ப் புழு – மண் புழு
  • ஓவா – ஓயாத
  • பாடு -உழைப்பு
  • வேதித்து – மாற்றி

 புல்லின் பரிவு

இதோஓ! இக்கரை முளைத்த இச்சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி

அதன் சிறு பூக்குலை அடியொன்று உயர்த்தி இதமுறத் தேன்துளி தாங்கி

ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்

பதமுறத் தனது பூம்ப ராகம் பரப்பித்து ஆசு இலாச் சிறுகாய் ஆக்கி

இதோ! என் தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே

“இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற்கு இடமிலை

சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகு முன், புள்ஆ எருது அயத்து ஒருசார் சிக்கி நீர் சென்மின்!” ***

எனத்தன் சிறுவரைப் புக்கவிட்டிருக்கும் இப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்

ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாது ஆங்காங்கு தோற்று பேரழகும்

ஆற்றல்சால் அன்பும் போற்று தம் குறிப்பிற்கு ஏற்றதோர் முயற்சியும் பார்த்துப் பார்த்துத்

தம் கண் பனிப்ப, ஆர்த்தெழும் அன்பினால் அனைத்தையுங் கலந்து

தம் என்பெலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பர்

மனோன்மணீயம் சுந்தரனார்

சொல்லும் பொருளும்

  • காண்டி – காண்க
  • ஆசு இலா – குற்றம் இலாத
  • அயம் – ஆடு, குதிரை
  • பூம்ப ராகம் -பூவில் உள்ள மகரந்தம்
  • தோட்டி – துறட்டி
  • புக்க விட்டு – போகவிட்டு

பரிவு பொறுமை – மனோன்மணீயம்- புதுகவிதை ஒப்பிடு

  • “இப் புல்லின் பரிவும் பொறுமை யும் புலனுங் காண்போர் ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாது” என்னும் பாடல் அடிகளுடன்,
  • “ஆயிரம் மிதிபடல்களிலும் நிமிர்ந்து நிற்கும் புற்களே உன் வழிகாட்டி” – என்ற புதுக்கவிதை கருத்தால் ஒன்றிப்போகின்றன.

வாய்க்காலின் விசித்திரம்

தமக்கு ஊண் நல்கும் வயற்கு உபயோகம் எனப் பலர் கருதும் இச்சிறு வாய்க்கால் செய்தொழில் எத்தனை விசித்திரம்!

ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட அன்றோஓ நடப்பதிச் சிறுகால்! பார் **

இதோ! பரற்களை நெறு நெறென்றரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் தன் வலிக்கு அடங்கிய மண்கல் புல்புழு இன்னதென்று இல்லை யாவையும் ஈர்த்துத் தன்னுள் படுத்தி

முந்நீர் மடுவுள் காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகும் இவை என ஓர்ந்து உருட்டிக் கொண்டு சென்று இட்டுமற்று

“ஐயா, அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகரம் முதலாக் குன்று வீழ் அருவியாய்த் தூங்கியும்

குகைமுகம் இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும் கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந்து ஓடியும்.

ஊறிடும் சிறிய ஊற்றாய்ப் பரந்தும் ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும் மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்

பற்பல பாடுயான் பட்டங்கு ஈட்டியது அற்பமே ஆயினும்

ஆதர வாய்க்கொள் இன்னமும் ஈதோ ஏகுவன் என விடை பின்னரும் பெற்றுப் பெயர்த்து எழிலியாய் வந்து இவண்அடைந்து, மற்றும்

இராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்கும் இந்நிலைமையர் யாவர்? (நீரைக் கையால் தடுத்து)

நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்! இரைந்ததென்? அழுவையோ?

ஆயின் ஏகுதி நீரே! நீரே! என்னை உன் நிலைமை?

நீரே! யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?

நீரே! நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு என்னை?

மனோன்மணீயம் சுந்தரனார்

சொல்லும் பொருளும்

  • சிறுகால் – வாய்க்கால்
  • சீரிய தூளி – நுண்ணிய மணல்
  • பரல் – கல்
  • முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
  • அண்ட யோனி – ஞாயிறு
  • சாடு – பாய்
  • ஈட்டியது – சேகரித்தது
  • எழிலி – மேகம்

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘லிட்டன் பிரபு’ எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல் (3 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) மனோன்மணீயம்
(B) அகத்தியம்
(C) முறுவல்
(D) குணநூல்

“எவரே புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்” – பாடலடிகள் இடம்பெறும் நூல்
(A) பாஞ்சாலிசபதம்
(B) மனோன்மணீயம்
(C) கலிங்கத்துப்பரணி
(D) புறநானூறு
(E) விடை தெரியவில்லை

மனோன்மணியத்தை இயற்றியவர்
(A) சுந்தரம் பிள்ளை
(B) சுந்தர முனிவர்
(C) சுந்தரர்
(D) சுந்தர மூர்த்தி

தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்
(A) இரகசிய வழி
(B) நூல்தொகை விளக்கம்
(C) மனோன்மணீயம்
(D) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
(E) விடை தெரியவில்லை

தமிழில் தோன்றிய முதல் நாடக நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) சீவகசிந்தாமணி
(C) மனோன்மணியம்
(D) மணிமேகலை
(E) விடை தெரியவில்லை

‘நீராருங் கடலுடுத்த….’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்
(A) சீவக சிந்தாமணி
(B) மணிமேகலை
(C) தேம்பாவணி
(D) மனோன்மணியம்
(E) விடை தெரியவில்லை

தவறான தொடரைச் சுட்டுக.
(A) 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது மனோன்மணீயம்
(B) காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பியது மனோன்மணீயம்
(C) மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்வது மனோன்மணீயம்
(D) இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதனில் இன்பம் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவது மனோன்மணீயம்

 

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!