அகநானூறு-3 அம்மூவனார்

அகநானூறு – அம்மூவனார்

அம்மூவனார்

  • அகப்பாடல்கள் மட்டும் பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
  • அம்மூவனார் நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
  • அம்மூவனாரின் பாடல்கள் இடம்பெற்றுள்ள எட்டுதொகை நூல்கள் -நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு.

திணை –  நெய்தல்

கூற்று – தலைமகன் பாங்கற்கு உரைத்தது

 பாடல்-140

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் *

இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்றூழ் விடர குன்றம் போகும்

கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச் சேரி *

விலைமாறு கூறலின் மனைய விளியறி  ஞமலி குரைப்ப, *

வெரீஇய மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு

இதை முயல்புனவன் புகைநிழல் கடுக்கும் மாமூது அள்ளல்

அழுந்திய சாகாட்டு எவ்வந்தீர  வாங்குந் தந்தை கைபூண் பகட்டின் வருந்தி வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே. *

 –  அம்மூவனார்

நெய்தல் நில பெண்களும் உப்பு வணிகம் செய்த செய்தியை கூறும் பாடல்

பாடலின் பொருள்

  • பரதவர், பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுவர். உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்
  • அந்த வெண்ணிறக் கல்உப்பை, உப்பு வணிகர் தங்களது வண்டியில் ஏற்றிச்செல்வர்.
  • வண்டியில் பூட்டிய எருதுகளை விரட்டக் கையில் தாழ்கோல் வைத்திருப்பர்.
  • கோடைக்காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட பாறைக் குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனை செய்வர்
  • அத்தகைய உமணர் ஒருவரின் மகள், அழகும் இளமையும் வாய்ந்தவள்.
  • அவள் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள்.
  • அங்கு ‘உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!’ என்று கூவினாள்.
  • அவள் கூவுவதைக் கேட்டு வீட்டில் உள்ள நாய் இது வேற்றுக் குரலென்று குரைத்தது.
  • அதனை எதிர்பாராத அப்பெண்ணின் கண்கள் இரண்டும் அச்சத்தால் மீன்கள் தம்முள் போர் செய்வது போல் மருண்டன
  • மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் அங்குக் கண்டேன்.
  • புதிதாகத் தினைப்புனம் அமைக்கும் கானவர் பழைய புனத்தைத் தீயிட்டு எரிப்பர்.
  • அப்பொழுது உண்டாகும் கரும்புகை போன்ற கருஞ்சேற்றில் அப்பெண்ணுடைய தந்தையின், உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக்கொண்டது
  • அவ்வண்டியைச் சேற்றிலிருந்து துன்பத்துடன் மீட்க முயன்ற எருதிற்கு அவள் தந்தை உதவி செய்தார்.
  • அந்த எருது அடைந்த துன்பம் போல, அவள் கண்களால் நான் துன்புற்றேன்.

உள்ளுறை

  • ‘வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன்’ என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.
  • எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!